ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் ரசாயனத் தொழிற்சாலையில் அணு உலை வெடித்து தீப்பிடித்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த மாநிலத்தின் ஏலுரு மாவட்டத்திலுள்ள அக்கிரெட்டி
கூடம் என்ற பகுதியில் வேதிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தொழிற்சாலையின் நான்காவது யூனிட்டில் திடீரென அணு உலை வெடித்து தீப்பற்றியது. இதனால், அந்த யூனிட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சுற்றிலும் தீப்பிடித்து மளமளவென பரவியதால் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றனர். அவர்களில் ஆறு பேர் தீயில் சிக்கி கருகி மாண்டனர்.
போருஸ் லேபாரட்டரீஸ் என்னும் அந்த தொழிற்சாலையில் சம்பவம் நிகழ்ந்தபோது 20 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசலு செய்தியாளர்களிடம் கூறினார். படுகாயமடைந்த 14 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்
படுகிறது.
அணு உலை வெடித்ததற்கு வாயு கசிவு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக அவர் கூறினார். திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரு வதாகவும் அவர் தெரிவித்தார்.
நள்ளிரவு நேரத்தில் சம்பவம் நிகழ்ந்த உடன் தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். ஊழியர்களைக் காப்பாற்ற அவர்கள் முயன்றனர். வாயு கசிவு ஏற்பட்டதால் அருகிலிருந்த கிராம மக்களை அவர்களின் இருப்பிடத்திலிருந்து அதிகாரிகள் வெளியேற்றினர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

