லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்திலுள்ள மகரிஷி ஸ்ரீலக்ஷ்மண் தாஸ் ஆசிரமத்தின் தலைவராக இருப்பவர் பஜ்ரங் முனி தாஸ் (படம்). சாமியாரான இவர், இம்மாதம் 2ஆம் தேதி சீதாப்பூர் சுற்றுவட்டாரத்தில் ஜீப்பில் சென்று சமயப் பிரசாரம் செய்தார். சீதாப்பூர் பள்ளிவாசல் அருகே சென்றபோது, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக அவர் பாலியல் மிரட்டல் விடுத்தார். அதனால் அங்கு ஒருவிதமான பதற்றம் எழுந்தது.
அவரது இந்த வெறுப்புப் பேச்சு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேசிய பெண்கள் ஆணையம் பஜ்ரங் முனி தாஸின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என வலியுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 11 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்தனர்.

