சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங்கிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதனால் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது. தேர்தலில் படுதோல்வி கண்டுள்ள நிலையில், இந்த விசாரணைப் படலம் சரண்ஜித் சிங்குக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அப்போதைய முதல்வர் சரண்ஜித் சிங்கின் உறவினரான பூபிந்தர் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது ரொக்கமாக ரூ.10 கோடி கைப்பற்றப்பட்டது.
அதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது, அது சட்டவிரோத மணல் குவாரி நடத்துபவர்கள் லஞ்சமாக கொடுத்த பணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அவரைக் கைது செய்தது.
இதனால் மணல்குவாரி முறைகேட்டில் சரண்ஜித் சிங்குக்கும் தொடர்பு உள்ளதாக சில தரப்பினர் குரல் எழுப்பினர். இதையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜலந்தரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் சரண்ஜித் சிங் நேற்று முன்தினம் மாலை முன்னிலையானார்.
அப்போது அவரிடம் அதிகாரிகள் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தெரிகிறது.
எனினும் விசாரணக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரிகள் தம்மிடம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் தமக்குத் தெரிந்தவரை பதில்களை அளித்ததாகவும் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்பது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த விசாரணை குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரசின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, நிலம், மண், மது மாஃபியா நடத்தியவர்கள் அரசாங்கத்தின் கஜானாவை காலி செய்துவிட்டதாகவும் அவர்களுடனான தனது மோதல் இப்போதைக்கு நிற்காது என்றும் தெரிவித்தார்.

