புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியின்போது இருதரப்பினர் இடையே வன்முறை வெடித்து பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதி யில் சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்தது. சாலையின் இரு புறத்திலும் இருதரப்பினர் நின்றுகொண்டு கற்களை வீசுவதுபோன்ற காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இருதரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, "நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பதற்றம் நிறைந்த பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத் தடுப்புப் படையினரும் போதுமான அளவு குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது காவலர்
களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்று தெரிவித்தார்.
இந்த மோதல் குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார். வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வன்முறை தொடர்பாக சனிக்கிழமை இரவு 9 பேரும் நேற்று காலை 5 பேரும் என 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

