புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியபோது அமெரிக்கப் படைகள் விட்டுச்சென்ற செயற்கைக்கோள் தொலைபேசி உள்ளிட்ட நவீன கருவிகள் தற்போது காஷ்மீர் தீவிரவாதிகள் வசம் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் எல்லைப் பகுதிகள் வழியே இந்தியாவுக்குள் ஊடுருவுவது தீவிரவாதிகளின் வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக அண்மைய சில வாரங்களாக மத்திய உளவுத்துறை தொடர்ந்து மத்திய அரசை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள செயற்கைக்கோள் தொலைபேசிகள், தெர்மல் இமேஜ் உள்ளிட்ட நவீன கருவிகள் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதற்கான சிக்னல்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்புவரை வடக்கு காஷ்மீரில் மட்டுமே இவ்வாறு பதிவாகி வந்த நிலையில், தற்போது தெற்கு காஷ்மீரிலும் பதிவாகி உள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இரிடியம் செயற்கைக்கோள் தொலைபேசிகளை ஆப்கானிஸ்தானில் இருந்தபோது அமெரிக்கக் கூட்டுப் படையினர் பயன்படுத்தினர். அவர்கள் அங்கிருந்து வெளியேறியபோது ஏராளமான செயற்கைக்கோள் தொலைபேசிகளை அப்படியே விட்டுச்சென்றதாகக் கூறப்படுகிறது. தலிபான்களும் இதர தீவிரவாத அமைப்புகளும் அவற்றைக் கைப்பற்றி, இப்போது பயன்படுத்தி வருவதாகக் கருதப்படுகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் இரிடியம் செயற்கைக்கோள் கைபேசிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில், காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுவது தெரியவந்ததை அடுத்து, மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, லடாக் எல்லைப் பகுதி அருகே சீனா மூன்று கைபேசி கோபுரங்களை நிறுவியுள்ளது.
இதேபோல் மேலும் சில கோபுரங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை சீன ராணுவம் மேற்கொள்ள இருப்பதாக வெளியான தகவல் இந்திய தரப்புக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய எல்லைக்கு மிக அருகே சீனா இரட்டை பயன்பாட்டு கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா அண்மையில் கூறியிருந்தது.
அதை உறுதி செய்யும் வகையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

