திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள படுகொலைச் சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
அங்கு கடந்த 14ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அதிகாலை வேளையில் தாக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மறுநாளே கொழிஞ்சாம்பாறை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் தன் தந்தையின் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கேரள மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் அடுத்த சம்பவமாக பாலக்காடு நகர்ப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்த ஆடவர் கொல்லப்பட்டுள்ளார். இவற்றை அரசியல் படுகொலைகள் என கேரள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனால் மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்ததை அடுத்து பாலக்காடு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த மாவட்டமும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கிடையே இரண்டு பேர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
கொலையாளிகளைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மிக விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

