புதுடெல்லி: இந்தியாவின் மொத்த பணவீக்கமானது 14.55% ஆக உயர்ந்துள்ளது. எனினும், மக்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு, பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
எனவேதான், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக, மார்ச் மாத இறுதியில் பணவீக்கம் 14.55% ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதை அரசு சுட்டிக்காட்டி உள்ளது.
அண்மையில்தான் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உச்சம் தொட்டது. இதன் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த பண வீக்கமானது தொடர்ந்து 12ஆவது மாதமாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மொத்த பணவீக்க விகிதம் 13.11% ஆக இருந்தது.
மின்னிலக்க பணத்தை ஊக்குவிக்க விரும்பவில்லை
மின்னிலக்க பணம் எனப்படும் கிரிப்டோ கரன்சியை ஊக்குவிக்க இந்தியா விரும்பவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மின்னிலக்க பணம் என்பது பயங்கரவாதத்துக்கு நிதி சேர்வதையும் கருப்புப் பண புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்றார்.
"எனவே நவீன தொழில்நுட்பம் கொண்டு கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்துவது என்பதே ஒரே தீர்வு. அந்தத் தொழில்நுட்பம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். மேலும், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். எந்த ஒரு நாடும் தனியாக இதை சாதித்துவிட முடியாது," என்றார் நிர்மலா சீதாராமன்.
மின்னிலக்கமயமாக்குதலில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

