அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான அனைத்துலக மையத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் முன்னிலையில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதுடன், அனைத்துலக புத்தாக்க மாநாட்டையும் தொடங்கி வைத்தார்.
இது பாரம்பரிய மருந்துகளுக்காக அமைக்கப்படும் உலகின் முதலாவது மற்றும் ஒரே அனைத்துலக மையமாகும்.
250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் அறிவியல், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாரம்பரிய மருந்துகளின் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த மையத்தை துவங்க முடிவு செய்யப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் முன்பு தெரிவித்திருந்தது.
நேற்றைய விழாவில் பேசிய டெட்ரோஸ், குஜராத்தி மொழியில் "அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்?" என விசாரித்தார்.
மேலும், பாரம்பரிய மருத்துவத்துக்கு இந்தியா அளிக்கும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக இந்தியா வந்தடைந்த தமக்கு இதமான வரவேற்பு அளிக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் டெட்ரோஸ்.

