புதுடெல்லி: ஜம்முவில் பாதுகாப்புப் படையினர் இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதால், மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் உரையாடலை இடைமறித்துக் கேட்ட உளவுத்துறை, பாதுகாப்புப் படையினர் அளித்த தகவலின் அடிப்படையில் இதனைக் கூறியுள்ளது.
தீவிரவாதிகள் அணிந்திருந்த வெடிகுண்டுகள் நிரம்பிய ஐஇடி பெல்ட் மூலம், அவர்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் மிகப்பெரிய தீவிரவாத சதித் திட்டத்தை தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வெடிகுண்டுகள் மிகவும் அபாயகரமானதாக இருந்ததும் தெரிய வந்து உள்ளது.
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான வெடிபொருள்களும் வெடிகுண்டு பெல்ட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
தீவிரவாதிகள், பிரதமரின் ஜம்மு காஷ்மீர் பயணத்தில் நாசவேலைக்குச் சதி திட்டம் தீட்டியிருக்கலாம் அல்லது சஞ்சுவான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என ஜம்மு காஷ்மீர் போலிஸ் அதிகாரி தில்பாக் சிங் கூறியுள்ளார். ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் இருவா் கொல்லப்பட்டனா்.

