பிரக்யாக்ராஜ்: இரண்டு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
ராம்குமார் யாதவ், 55, அவரது மனைவி குசும் தேவி, 52, மகள் மணீஷா, 25, மருமகள் சவீதா, 27, ராம்குமாரின் பேத்தி மீனாட்சி, 2 ஆகியோர் தீ வைத்து எரிக்கப்பட்டனர். ராம்குமாரின் மற்றொரு பேத்தியான சாக்ஷி என்ற 5 வயது குழந்தை இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளாள். மேலும் ராம்குமாரின் மகன் சுனில் வீட்டில் இல்லாததால் அவரும் தப்பித்துள்ளார்.
மாண்டவர்களின் உடலில் காயங்கள் உள்ளதால், அடித்துக் கொலை செய்துவிட்டு பின் வீட்டிற்கு நெருப்பு வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த கொலைக்கு காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொள்ள ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

