ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றிருந்தார்.
அவரது பயணத்தையொட்டி உள்ளூர் காவல்துறையினரும் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இப்பயணத்தின்போது ரூ.20,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
அத்துடன், ரூ.3,100 கோடி செலவில் ஜம்மு-காஷ்மீா் பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 கி.மீ. தொலைவிலான பனிஹால்-குவாசிகண்ட் இருவழி சுரங்கப் பாதைகளையும் மக்கள் பயன்பாட்டுக்குப் பிரதமர் தொடங்கிவைத்தார்.
இங்குள்ள பள்ளிக் கிராமத்தில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் திருவிழாவிலும் அவர் பங்கேற்றார்.
இவ்விழாவை ஒட்டி விவசாயி களுக்கான அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியும் நடத்தப்பட்டது.
அதன்பின்னா், ஜம்முவின் சம்பா மாவட்டம், பாலி கிராமத்துக்குச் சென்ற பிரதமா், அங்கு அமைக்கப்பட்டிருந்த 500 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தைத் தொடங்கிவைத்தாா்.
இதைத்தொடர்ந்து கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சேனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள ரட்லே, குவார் ஆகிய நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னா், அங்கிருந்து மும்பைக்குச் சென்ற பிரதமா், அங்கு லதா தீனாநாத் மங்கேஷ்கா் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், "மும்பையில் முதல் நபராக லதா மங்கேஷ்கர் விருதைப் பெறவிருக்கிறேன். இந்தக் கௌரவத்தை நான் நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். அவர் எப்போதும் வலுவான, வளமான இந்தியாவைக் கனவு கண்டார். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களித்தார்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

