பெங்களூரு: பார்வையற்ற சகோதரர்கள் 29 அடி உயர தேரை வடிவமைத்து வியக்க வைத்துள்ளனர்.
கர்நாடகாவின் பாகல்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மல்லப்பா.
கோவில் தேர்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவரான அவர், ஏராளமான கோவில்களுக்கு தேர்களை வடிவமைத்துள்ளார்.
கர்நாடக அரசு இவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் பல அமைப்புகளின் விருதுகளையும் பெற்றவர் மல்லப்பா.
கொப்பல் மாவட்டம், குஷ்டகி பகுதியில் உள்ளது மாருதேஸ்வரா கோவில்.
இக்கோவிலுக்குப் புதிய தேர் ஒன்றை வடிவமைத்து கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் மல்லப்பாவை கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று கடந்த 2018ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார் மல்லப்பா.
எனினும் எதிர்பாராதவிதமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் காலமானார்.
தேர் வடிவமைப்புப் பணி பாதிக்கப்பட்டதால் ஊர் மக்கள் வருத்தம் அடைந்தனர்.
இந்நிலையில், திடீர் திருப்பதாக மல்லப்பாவின் பார்வையற்ற இரு மகன்களும் தந்தை விட்டுச் சென்ற பணியை தாங்கள் முடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்தனர்.
இவர்களால் எப்படி தேரை உருவாக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்தாலும், ஊர் மக்கள் முழுமனதுடன் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, தேர் வடிவமைப்பு தொடர்பாக தங்கள் தந்தை சொல்லிக்கொடுத்ததை வைத்து மல்லப்பாவின் இரு பார்வையற்ற மகன்களும் பணியைத் தொடங்கினர்.
இன்னொரு சிற்பி அவர்களுக்கு உதவ, 29 அடி உயர தேரை கச்சிதமாக உருவாக்கி, கிராம மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 15ஆம் தேதி மாருதேஸ்வரா கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது புதிய தேரில்தான் சாமி பவனி நடைபெற்றது.
பார்வையற்ற சகோதரர்களின் திறமையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

