"இந்தியா மீது முத்திரை குத்தப்பட்டால் இந்தியப் பொருள்களின் சந்தை பாதிக்கப்படும்"
புதுடெல்லி: சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்று இந்தியா மீது முத்திரை குத்தப்பட்டால் அனைத்துலக அளவில் இந்தியப் பொருள்களின் சந்தை கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா ஒரு ஜனநாயக நாடாக பார்க்கப்பட வேண்டும் எனில், அனைத்து குடிமக்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என்றார்.
அனைவரும் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்தால், அனைவரையும் அனுசரித்துச் செல்லும் கருணைமிக்க நாடாக இந்தியாவின் பெயர் விளங்கும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
"அவ்வாறு பெயரெடுப்பது இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் நல்லது. ஏனெனில், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் பொதுவாக ஒரு நாட்டின் பொருள்களை வாங்கும்போது அதன் (நாட்டின்) குணநலன்களைப் பார்ப்பார்கள்.
"'இந்த நாடு இத்தகைய சிறப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே இந்த நாட்டின் பொருள்களை வாங்குவதில் தவறில்லை' என்ற மனப்பான்மை தான் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இருக்கும்," என்றார் ரகுராம்.
சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற முத்திரை சந்தையை மட்டுமல்லாமல், வெளிநாடுகளுடனான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர்,
வெளிநாட்டு அரசாங்கங்கள் ஒரு நாட்டை இரண்டு விதமாக பார்ப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
"ஒன்று, இந்த நாடு நமக்கு நம்பகமான கூட்டாளி என்ற பார்வை. இரண்டாவது, அந்த நாடு எவ்வாறு சிறுபான்மையினர்களை நடத்துகிறது என்ற பார்வை.
"ஆகவே, இந்தியா இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையால் தான் சீனாவின் வெளிநாட்டுச் சந்தை அடிவாங்கியது," என்றார் ரகுராம் ராஜன்.
ஜனநாயகத்துக்கு மதிப்பு கொடுத்ததால் உக்ரேனின் சந்தை மதிப்பு சிறப்பாக இருந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பி வருகின்றன. இத்தகைய போக்கை பாஜக கைவிட வேண்டும் என்றும் சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.

