திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழா எதிர்வரும் மே 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் அந்த விழாவுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், விழாவையொட்டி வாண வேடிக்கை நிகழ்வை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சூர் வடக்கு நாதன் கோவிலில் நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழா உலகளவில் பெயர் பெற்ற ஒன்று. இந்த விழாவில் உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
யானைகள் அணிவகுப்பும் வாண வேடிக்கையும் இந்தத் திருவிழாவின் சிறப்பு அம்சங்களாகும்.
கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சூர் பூரம் விழாவுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் சோகத்தில் இருந்தனர்.
தற்போது தொற்றுப்பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, பழையபடி திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.
எனினும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து விழாவில் பங்கேற்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.