புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றின் நான்காவது அலை பரவத் தொடங்கி விட்டதாகவும் கருதப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் நான்காவது அலை உருவெடுப்பதைத் தடுக்கும் வகையில் மீண்டும் தொற்றுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பொது இடங்களான ரயில், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் நாடு முழுதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,483 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15,636 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பல மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொளி வழி ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

