புதுடெல்லி: இந்தியாவில் நிகழ்ந்த அண்மைய இன வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலுக்கு முடிவுகட்டும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் அரசு உயரதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை, டெல்லி முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தனிச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் உட்பட 108 பேர் அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தங்களது கடிதத்தில் நாட்டின் இப்போதைய அரசியல் சூழல் குறித்தும் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
"கடந்த சில ஆண்டுகளாக டெல்லியிலும் அசாம், குஜராத், ஹரியானா, கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களிலும் சிறுபான்மையின மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது அச்சுறுத்தலின் புதிய பரிமாணமாக இருக்கிறது. இத்தகைய மிகப் பெரிய சமூக அச்சுறுத்தலுக்கு இடையில், தங்களின் மௌனம் எங்களைச் செவிடாக்குவதாக உள்ளது," என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
"முன்னாள் அரசு அதிகாரிகளாக இதுபோன்ற கடுமையான விமர்சனங்களை நாங்கள் வழக்கமாக முன்வைப்பதில்லை. ஆனால், நம் முன்னோர்கள் உருவாக்கித் தந்த அரசியலமைப்பின் மாண்பு அழிக்கப்படும் வேகத்தின் காரணமாக நாங்களாக முன்வந்து பேசும், எங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என்று அவர்கள் கூறியுள்ளனர்.
'அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான நம்பிக்கை' என்ற தமது உறுதிமொழிப்படி, உளச்சான்றுடன் பிரதமர் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

