லக்னோ: தாதியின் கையில் இருந்து தவறி விழுந்து பிறந்த குழந்தை இறந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நிகழ்ந்தது.
துணியில் சுற்றாமல் குழந்தையைத் தூக்கியதால் தாதியின் கையில் இருந்து அந்த ஆண் குழந்தை நழுவி, கீழே விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அக்குழந்தையின் தாய் அலறினார். அச்சத்தம் கேட்டு அவரின் குடும்பத்தினர் பிரசவ அறைக்குள் சென்றனர்.
அப்போது, நலமுடன் குழந்தையை ஈன்றெடுத்ததாகவும் அதனை ஒரு கையால் தாதி தூக்கியபோது அது கீழே விழுந்து இறந்துவிட்டதாகவும் அப்பெண் அவர்களிடம் விவரித்தார்.
ஆனால், குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறி, நடந்ததை மறைக்க முயல்வதாக மருத்துவமனை நிர்வாகத்தின்மீது அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இதன் தொடர்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் தலையில் காயமேற்பட்டிருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கை குறிப்பிட்டது.
இதனையடுத்து, உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

