புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 46 நாட்களில் இல்லாத அளவு முதல்முறையாக தினசரி கொவிட்-19 பாதிப்பு 3,000க்கும் மேல் பதிவானது. 24 மணி நேரத்தில் 3,303 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் 39 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது. டெல்லியில் 1,367, ஹரியானாவில் 535, கேரளாவில் 341, உ.பி.யில் 258, மகாராஷ்டிராவில் 186 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கூடுதல் தடுப்பூசி போடுவதற்கான இடைவெளியை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக அரசாங்கம் குறைக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் கூறின.
டெல்லியில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படவில்லை என்று டெல்லி நகர சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
இதற்கிடையே, நாட்டில் ஆறு முதல் 12 வயது வரையிலான சிறாா்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

