புதுடெல்லி: இந்தியாவில் பல இடங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலால் பலரும் அவதிப்படும் நேரங்களில் திருமண ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளைப் பலரும் பகலில் தவிர்த்து விடுவது வழக்கம்.
கடந்த சில நாள்களில் நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகமாகவே பதிவாகியுள்ளது. இந்நிலையில், திருமண ஊர்வலம் ஒன்று நகரும் பந்தலுக்குக் கீழ் ஒய்யாரமாகச் செல்லும் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
இந்தியத் திருமணங்கள் எப்போதுமே கொண்டாட்டங்கள் நிறைந்தவை. 'அடாது மழை பெய்தாலும் விடாது காரியத்தைச் செய்தல்' என்பதற்கு ஏற்ப, பெருந்தொற்று, பணவீக்கம் என எது நடந்தாலும் அதற்கேற்ப மாற்றிக்கொண்டு திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
நகரும் பந்தலுக்குக் கீழ் திருமண ஊர்வலம் போகும் காணொளியை, 'இந்தியா கண்டுபிடிப்புகளின் பூமி' என்று குறிப்பிட்டு தேவயானி கோஹ்லி என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் செல்லும் மணமகன் அழைப்பு ஊர்வலத்தில் கூடவே நகரும் பந்தல் ஒன்று செல்கிறது. இது நடைபெற்ற இடம் பதிவிடப்படவில்லை.
இணையவாசிகள் பலர் இதைப் புத்தாக்க யோசனை என்று கொண்டாடினாலும் சிலர் மின் கம்பிகளைச் சுட்டிக்காட்டி இது அபாயம் விளைவிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

