புதுடெல்லி: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்குக் கடுமையான அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை என்பது, வெயிலின் கடுமையான தாக்கத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும்.
கோடைக்காலம் என்பதால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நாட்டின் வடமேற்கு, மத்திய வட்டாரங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த நான்கு நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ராஜ்கர்க் பகுதியில் 45.6 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவான நிலையில், வடமேற்கு இந்தியாவின் பல இடங்களில் 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். தற்போதே இந்த மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டி பதிவாகியுள்ளது.
"அடுத்த மூன்று நாள்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும்.
"இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகர் புதுடெல்லியிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இது கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம் என்று கூறப்பட்டது.

