புதுடெல்லி: சீனப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் சிலர் கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பில் பெய்ஜிங் விதித்திருந்த விசா, விமானச் சேவைக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாகக் கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் இத்தகைய மாணவர்களில் சிலருக்கு மீண்டும் விசா வழங்க முடிவெடுத்திருப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியைத் தொடர சீனா திரும்ப விரும்பும் இந்திய மாணவர்களின் தவிப்புக்கு உயர் முக்கியத்துவம் அளிப்பதாக அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மற்ற நாடுகளில் இருந்து இதேபோன்று சீனா திரும்பும் மாணவர்களுக்கான நடவடிக்கைகள் குறித்து இந்தியத் தரப்பிடம் தகவல் பகிரப்பட்டதாகக் கூறிய அவர், உண்மையிலேயே சீனா திரும்ப ஆர்வம் கொண்டுள்ள மாணவர்களின் பட்டியலை இந்தியா வழங்கியதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
ஏறக்குறைய 23,000 மாணவர்கள் இவ்வாறு கல்வியைத் தொடர முடியாமல் தவிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மாணவர்கள் என்றும் கூறப்பட்டது.

