புதுடெல்லி: "பொதுமக்களின் வளர்ச்சித் திட்டங்களில் லஞ்சமோ கமிஷனோ வாங்கக்கூடாது என பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (படம்) உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். யோகியின் இந்த உரையைக் கேட்டு அரங்கிலிருந்த பாஜகவினர் அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
லலித்பூரில் நடந்த பாஜக கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில், பாஜகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி, "கமிஷன் எனும் பெயரில் நம் எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் பெறுவதை முதலில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் மட்டத்தில் நாம் லஞ்சத்தை ஒழிக்கமுடியும். இந்தத் தகவல் முதலில் நம் கட்சியினர் இடையே செல்வது அவசியம். மக்களின் பிரதிநிதிகளான உங்களுக்கு அவர்களிடம் லஞ்சம் கேட்க எந்த உரிமையும் இல்லை," எனத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் யோகி, தனது இரண்டாம் முறை பதவிக் காலத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன் வெளிப்பாடாகவே அவரது இந்த உரை இருந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநில அரசின் திட்டங்களை அமலாக்குவதற்கு அம்மாநில அரசின் சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக முதல்வர் யோகியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் யோகி, முதலில் புகார் அளிப்பவர்கள் சரியாக இருந்தால், தாம் அதிகாரிகளைச் சரிசெய்வதாகவும் பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர் தனது கருத்தை முதன்முறையாக வெளிப்படையாக மேடையிலும் பேசியுள்ளார். இதுபோன்ற புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டி முதல்வர் யோகி, அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளார்.
மேலும் அமைச்சர்கள், ஐபிஎஸ், ஐஏஎஸ் மற்றும் அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தமது மற்றும் குடும்பத்தாரின் சொத்து விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இவற்றை பொதுமக்களும் காணும் வகையில் இணையத்தளத்தில் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

