உதய்பூர்: இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கட்சியைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "இந்தியப் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது.
"மாநிலங்களின் நிதி நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமாக உள்ளது. பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சியானது சிறப்பானதாக இல்லை.
"நாட்டின் பணவீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
"அரசின் தவறான கொள்கைகள், பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.
"உலக நாடுகளில் நிலவும் சூழலும் இந்தியப் பொருளாதாரத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது. இந்த நீட்சிகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் அரசு திண்டாடுகிறது.
"உலகளாவிய, உள்நாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரக் கொள்கைகளை மீட்டமைப்பது அவசியமானது," என்றார்.
இதற்கிடையே, கொள்கை முடக்கம், மோசடிகளால் காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி முடங்கியதாக இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு பேசிய அவர் காங்கிரசைப் பற்றி இவ்வாறு சாடினார்.

