பெங்களுர்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது அமிலம் வீசிய வழக்கில் கைதான இளையர் தப்பியோட முயன்றபோது, காவல்துறையினர் அவரைச் சுட்டுப்பிடித்தனர்.
நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 25 வயது இளம்பெண்ணை, நாகேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
நாகேஷின் காதலை இளம்பெண் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், அவர்மீது அமிலம் வீசிய நாகேஷ், தமிழகத்திற்குத் தப்பி வந்து திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் தனியார் ஆசிரமத்தில் பதுங்கியிருந்ததை அறிந்த போலிசார், அவரைக் கைது செய்தனர்.
பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லும் வழியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறி வேனில் இருந்து இறங்கிய நாகேஷ், தப்பியோட முயற்சித்திருக்கிறார்.
அப்போது, வானை நோக்கி சுட்டு எச்சரித்த காவல்துறையினர்மீது அவர் கல்லை வீசி தாக்கினார். அதன் பிறகு காவல்துறையினர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
தற்போது காலில் குண்டு அடிபட்டு நாகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

