ஆ. விஷ்ணு வர்தினி
வாழ்க்கை முழுதும் மின்னிலக்கம் எனும் 'டிஜிட்டல் ஃபார் லைஃப்' இயக்கத்தின் அங்கமாக 'டிஜிட்டல் ஃபார் லைஃப்' விழா 2022 நிகழ்வு நேரடியாகவும் இணையத்திலும் நடைபெறுகிறது.
சிங்கப்பூர் முழுதும் இரண்டு பிரதான இடங்களிலும் மற்றும் இதர 18 இடங்களிலும் இந்த 'டிஜிட்டல் ஃபார் லைஃப்' விழா இடம்பெறுகிறது.
மின்னிலக்க முறையில் பண வர்த்தகமும், வணிகமும், உடல்நல பராமரிப்பும் கூட வந்துவிட்டது. இவ்வாறு அன்றாட வாழ்வியலில் இரண்டற கலந்துவிட்ட மின்னிலக்கத்தைக் கற்றுக் கொண்டாட ஊக்குவிக்கின்றது இவ்விழா.
சிறார் முதல் பெரியோர் வரை, அவரவர் வாழ்வில் மின்னிலக்கத்தின் துணைகொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான பல்வேறு இணையப் பயிலரங்குகள் மே 21ஆம் தேதியிலிருந்து 29 ஆம் தேதி வரை ஏற்பாடாகியுள்ளன.
மக்கள், பொது அமைப்புகள், தனியார் அமைப்புகள் ஆகிய மூன்று தரப்புப் பங்காளிகளை ஒன்றிணைக்க முனைந்துள்ளது தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள 'டிஜிட்டல் ஃபோர் லைஃப்' இயக்கம். மின்னிலக்க செயல்
பாடுகளின் வாயிலாக வாழ்வியலை மேம்படுத்த மட்டுமின்றி, மின்னிலக்கத்தை வாழ்க்கை பயணமாக அமைத்துக்கொள்ளவும் இவ்விழா ஊக்குவிக்கின்றது.
வாழ்வதை, விளையாடுவதை, பணிபுரிவதை மாற்றியமைத்துள்ள மின்னிலக்கமானது உத்வேகமூட்டும் வகையில் புதுப்புது வாய்ப்புகளை அமைத்து தருவதோடு, உதவி தேவைப்படுவோருக்கு நம்பிக்கையும் அளிக்கின்றது. வாழ்க்கையை இனிமையாக்கும் இத்தகைய மின்னிலக்கத்தைப் பயன்படுத்தி பயனடைய தேவையான நல்ல பழக்கவழக்கங்களை இவ்விழா அறிமுகப்படுத்த முயல்கிறது.
நேரடியாகவும் இணையத்திலும் நடைபெறும் நூற்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக பிஓஎஸ்பி (POSB), மூத்தோருக்கான மின்னிலக்க வங்கி சேவை பயிலரங்கினை நடத்தவுள்ளது. இணைய பணப் புழக்க சேவைகளை எவ்வாறு அணுகுவது, இணைய பண மோசடிகளிலிருந்து எவ்வாறு நம்மை காத்துக்கொள்வது என்பது குறித்து இப்பயிலரங்கு விளக்கும். தீவு முழுதும் 50 சமூக கூடார நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
மென்பொருள் பயன்பாட்டையும் நிரலாக்க மொழிகளையும் மாணவர்கள் கற்றுத்தேர்வதற்கான வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன. வீடுகளில் குடும்பத்தைப் பிணைக்கும் வகையில் மின்னிலக்கத்தை எவ்வாறு கட்டுப்பாட்டுடன் கையாளலாம் என்று பெற்றோருக்கு வழிகாட்டும் நிகழ்வுகளும் இவ்
விழாவில் இடம்பெறவிருக்கின்றன.

