திருப்பதி: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரிபகுதியைச் சேர்ந்தவர் கொத்துரு வர்ஷினி. நிறைமாத கர்ப்பிணியான இவர், கணவருடன் கூலி வேலை செய்வதற்காக திருப்பதிக்கு வந்தார்.
வந்த இடத்தில், அவரது கணவர் தினமும் மது அருந்துவதும் சண்டை போட்டு அடித்துத் தாக்கு வதுமாக இருந்துள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப் போன வர்ஷினி, கணவன் மீதுள்ள கோபத்தில் வீட்டைவிட்டு வெளி யேறினார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் செல்ல நினைத்தார். ஆனால், அவரிடம் போதிய பணமில்லை.
மீண்டும் கணவரிடமே திரும் பிச் செல்லவும் அவர் விரும்பாத தால், கால் போன போக்கில் நடந்தார். திருப்பதியில் தனது பயணத்தைத் துவங்கிய வர்ஷினி, ஏறத்தாழ 65 கி.மீ. தொலைவில் உள்ள நாயுடுபேட்டைக்கு வந்து சேர்ந்தார்.
நீண்டநேரம் நடந்ததால் மிகவும் களைப்படைந்த வர்ஷினிக்கு அங்குள்ள பேருந்து நிலையத்தை அடையும் தறுவாயில் பிரசவ வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் சாலையிலேயே அமர்ந்து கதறினார். இளையர் ஒருவர் 108 அவசர சிகிச்சை வாகனத்தை அழைத்தார்.
வாகனம் வருவதற்குள் சாலையிலேயே பிரசவமானது. பெண் குழந்தை பிறந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள் சிலர், துணிகளைக் கொண்டுவந்து மறைப்பை ஏற்படுத்தினர்.
தாய்-சேய் இருவரும் அவசர சிகிச்சை வாகனம் வந்ததும் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

