கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடி யிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.
இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ரயில்வே தண்டவாளங்கள், பாலங்கள், சாலை போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார இணைப்புகள், தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
222 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், 57,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மைக் கழகம் தெரிவித்து உள்ளது.
மழை வெள்ளத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, 1,434 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. மொத்தம் 202 வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, அருணாசலப் பிரதேசத்திலும் கடந்த சில நாள்களாக தொடர்மழை பெய்து வருவதால், பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாண்டில் முதல்முறை யாக ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப் பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன், கம்ரூப் ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
1,400 பயணிகளைக் கொண்ட இரண்டு ரயில்கள் நடுவழியில் நின்றன. அவர்களில் 1,245 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 119 பயணிகள் விமானத்தின் மூலம் சில்சார் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவப் படைகள், அசாம் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

