புதுடெல்லி: பிரதமர் மோடி நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் அத்துமீறியதை அடுத்து அதற்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இருநாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தன. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத் திலான தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டன. சில இடங்களில் மட்டும் இருதரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப் படவில்லை.
இந்த நிலையில் எல்லையில் ராணுவ கட்டமைப்பை வலுப் படுத்த பாங்காங் சோ அருகே மிகப்பெரிய பாலம் ஒன்றை சீனா கட்டியது.
தற்போது பாங்காங் சோ ஏரியின் குறுக்கே சீன ராணுவம் இரண்டாவது பெரிய பாலத்தை கட்டி வரும் செயற்கைக் கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல், "சீனா பாங்காங் பகுதியில் முதல் பாலம் கட்டியதற்கு இந்திய அரசு, நாங்கள் நிலைமையைக் கவனித்து வருகிறோம் என்றது. சீனா பாங்காங்கில் இரண்டாவது பாலம் கட்டியுள்ளது. இதற்கும் இந்திய அரசு, நாங்கள் நிலைமையைக் கவனித்து வருகிறோம் என்றது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய ஒருமைப்பாட்டிலும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமில்லை. தைரியமில்லாத, பணிவான பதில் ஒன்றும் செய்ய போவதில்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

