திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றில் அபாயக் கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களின் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 மாவட்டங்களில் 6.62 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் உருக் குலைந்துள்ளன. இதனால் போக்கு வரத்து வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் 48,000 பேர் தங்கியுள்ளனர். மழை வெள்ளத்தால் ஹோஜாய், சாசார் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மட்டும் தலா ஒரு லட்சம் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பொதுமக்கள் மீட்கப்பட்டு பாது காப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 248 நிவாரண முகாம்களில் 48 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் லும்டிங் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சிபு மிஸ்ரா வெள்ளப் பாதிப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட சென்றார். அவருக்காக ரப்பர் படகு தயார் நிலையில் இருந்தது. முழங்கால் வரை சாலையில் தண்ணீர் தேங்கி யிருந்தது. இதை கடந்துதான் எம்எல்ஏ ரப்பர் படகில் ஏற வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்து எம்எல்ஏ சிபு மிஸ்ரா மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரரின் முதுகில் தொற்றிக் கொண்டார். அந்த வீரர் தனது முதுகில் எம்எல்ஏவை சுமந்து ரப்பர் படகில் இறக்கினார். இது தொடர் பான காணொளி சமூக ஊடகங் களில் வெளியாகி உள்ளது. எம்எல்ஏ சிபு மிஸ்ராவின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

