பாட்னா: கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் பிணையில் விடுவிக்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில் அவர் மீது புதிய ஊழல் வழக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 2004ஆம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச் சராகப் பதவி வகித்தார்.
2004-2009க்கு இடையே ரயில்வே வேலை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என்று அவர் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. லாலு தவிர அவரது மனைவி முன்னாள் பீகார் முதல்வரான ராஃப்ரி தேவி, மகளும் எம்.பி.யுமான மிசாபார்தி மற்றும் அவரது உறவினர்களின் பெயர்கள் புதிய வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் வீடு, அவரது மகள் மிசாபாரதி வீடு ஆகிய இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பீகார் தலை நகர் பாட்னாவில் மட்டும் 4 இடங் களில் இந்தச் சோதனை நடந்தது.
மேலும் லாலு பிரசாத் உறவினர் வீடுகள், அவருடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஏற்கெனவே ஹோட்டல்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2017ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
உரிமம் வழங்கியதற்கு கைமாறாக மூன்று ஏக்கர் நிலத்தை அவரும் அவரது குடும்பத்தினரும் வளைத்ததாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில் ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புதிய வழக்கை பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கின்றனர்.