ஸ்ரீநகர்: சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய பத்து தொழிலாளர்களை ஜம்மு தீயணைப்பு, மீட்புப் படையினர் சடலமாக மீட்டுள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் 36 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடந்து வரும் நிலையில் வியாழக்கிழமை இரவு இப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி உடனடியாகத் தொடங்கியது. எனினும் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது.
கூடுதல் பாதுகாப்புடன் மீட்புப் பிரிவு வீரர்கள் செயல்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பத்து தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களில் பத்து பேர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேப்பாளத்தைச் சேர்ந்த இருவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், காஷ்மீரைச் சேர்ந்த இருவர் இந்த விபத்தில் மாண்டுவிட்டனர். மீட்புப்பணி நேற்றும் நீடித்தது.
இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.16 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.