புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நூறு ரூபாயைக் கடந்தது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
மாநில அரசுகள் வரியைக் குறைத்தால் விலை குறையும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் மாநில அரசுகள், அது சாத்தியமில்லை எனக் கைவிரித்துவிட்டன. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான உள்ளூர் வரி குறைக்கப்பட்டது. அதன் காரணமாக அம்மாநிலங்களில் விற்பனை விலை கணிசமாகக் குறைந்தது.
கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் மீதான உற்பத்தி வரியை 10 ரூபாய் என்ற அளவில் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது மத்திய அரசின் தீபாவளிப் பரிசு என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், உக்ரேன், ரஷ்ய போர் காரணமாக அனைத்துலக விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் இறுதியில், 137 நாள்களுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் எதிரொலியாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கின.
கடந்த மாத இறுதியில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், விலை குறைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவிட்டார்.
அதில், ஏழைப் பெண்களுக்கான உஜ்வாலா கியாஸ் எரிவாயு உருளைத் திட்டத்தின் கீழ் ஓர் எரிவாயு உருளைக்கு இருநூறு ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் ஒன்பது கோடி பேர் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தால் ஆண்டுக்கு ரூ.6,100 கோடி கூடுதலாக செலவாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு குறைத்துவிட்டதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைந்ததாக அவர் சுட்டிக்காட்டிஉள்ளார். மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழகத்துக்கு 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.