திருவனந்தபுரம்: கேரளாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய விஸ்மயா வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
விஸ்மயா தன் உயிரை மாய்த்துக்கொள்ள அவரது கணவர் கிரண் குமார்தான் காரணம் என்று தீர்ப்பளித்த கொல்லம் கூடுதல் நீதிமன்றம், அவருக்கு பத்து ஆண்டு சிறைத்தண்டனையும் 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக வரதட்சணைப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் திருமணத்துக்குப் பின் வரதட்சணைக் கொடுமைகளுக்கு ஆட்படுவதும் உயிரை மாய்த்துக்கொள்வதும் அதிகரித்து வரும் பட்சத்தில், இத்தகைய புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்லம் பகுதியைச் சேர்ந்த விஸ்மயா நாயர் என்ற இளம் பெண், அரசு ஊழியரான தனது கணவர் கிரண் குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயுர்வேத மருத்துவம், அறுவை சிகிச்சை தொடர்பான இளங்கலை மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வந்த, 22 வயதான விஸ்மயா, வரதட்சணைக் கொடுமை காரணமாக தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது பெற்றோர் புகார் எழுப்பினர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கிரண் குமார் கைதானார். வழக்கு விசாரணையின்போது விஸ்மயா இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் தமது உறவினருக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் மூலம் அவரது உடலில் பல காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், தங்களது மகளின் மரணத்துக்கு கிரண்குமாரும் அவரது குடும்பத்தினரும் காரணம் என விஸ்மயாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
திருமணத்தின்போது நூறு பவுன் தங்க நகைகளும் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரும் நிலமும் வரதட்சணையாக தரப்பட்டதாக தெரிவித்த விஸ்மயாவின் பெற்றோர், அதன்பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண் குமார் கொடுமைப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.
மேலும், விஸ்மயாவை பலமுறை கிரண் குமார் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஒருமுறை காவல்துறை தலையிட்டு சமாதானப்படுத்தும் அளவுக்கு பிரச்சினை பெரிதாகியது என்றும் அந்தச் சமயத்திலும்கூட மனைவியை கிரண் குமார் பிறந்த வீட்டுக்கு அனுப்பவில்லை என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விஸ்மயாவின் உடல் கணவர் வீட்டில் குளியலறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், மர்ம மரணம் என்று குறிப்பிட்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
மருத்துவம் படித்து வந்த 22 வயது இளம் பெண் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தது கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிரண் குமாருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இறப்பதற்கு முன்பு விஸ்மயா தன் தந்தையைத் தொடர்புகொண்டு கண்ணீர் மல்க பேசியுள்ளார். அதை முக்கிய ஆதாரமாகக் கருதி, அதன் அடிப்படையில் கிரண் குமாருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
22 வயது மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமை: ரூ.12 லட்சம் அபராதமும் விதிப்பு

