சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்க பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை மத்திய அரசை எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பதன் மூலம் மிகப்பெரிய அளவில் உயிர், பொருள் சேதங்களை ஏற்படுத்துவதே பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் நோக்கம் எனவும் இந்திய உளவுத்துறை கூறியுள்ளது.
மேலும், பஞ்சாப் மாநிலத்தைச் சுற்றியுள்ள எல்லையோரப் பகுதிகளிலும் இதேபோன்ற சதித்திட்டத்தை அரங்கேற்ற பாகிஸ்தான் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் திட்டத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு காலிஸ்தான் அமைப்பும் அந்நாட்டுக்காக இந்தியாவில் அடையாளம் தெரியாத வகையில் செயல்படும் உளவாளிகளும் உதவ இருப்பதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது.
மேலும், காலிஸ்தான் அமைப்பினருக்கும் உளவாளிகளுக்கும் பெரிய அளவில் பண விநியோகம் நடந்திருப்பது உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள அனைத்து ரயில் தண்டவாளப் பகுதிகளில் சுற்றுக்காவல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை பயங்கரவாதிகள் சரக்கு ரயில்களையும் குறிவைத்து சதிச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் மட்டுமல்லாமல், அதன் அண்டை மாநிலங்களிலும் ரயில் தண்டவாளங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
சந்தேகத்துக்குரிய நடமாட்டங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மாநில காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிற எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.