புதுடெல்லி: குரங்கம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களை மத்திய அரசு உஷார்ப்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலின்போது இவ்விரு மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, இம்முறை முன்கூட்டியே மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்ற போதிலும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தேசிய நோய் தடுப்பு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் ஆகியவற்றை தொடர் கண்காணிப்பில் இருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
"மும்பை நகரில் 28 படுக்கைகள் கொண்ட தனித்தனி வார்டுகளை மும்பை மாநகராட்சி அமைத்து தயார் நிலையில் உள்ளது. இந்தத் தொற்று பாதித்தவர்கள் ஐந்து முதல் 21 நாள்கள்வரை பாதிப்புக்கான அறிகுறிகளை அனுபவிக்க நேரிடலாம். எனவே தீவிர கண்காணிப்பு தேவை," என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும் குரங்கம்மை தொற்று தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சு அனுப்பியுள்ளது.
இறந்தோர் எண்ணிக்கை:
இந்தியா கண்டனம்
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டதற்கு இந்தியா மீண்டும் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற அனைத்துலக சுகாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா, இந்தியாவில் 4.5 மில்லியன் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்திய அரசு தயாரித்துள்ள மிகத் துல்லியமான புள்ளி விவரங்களை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தனியார் அமைப்புகளின் துல்லியமற்ற தகவல்களை நம்பக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்துறை தொழில்நுட்ப இயக்குநரான வில்லியம், இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
தங்களுக்குக் கிடைத்துள்ள தரவுகளின்படி இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் நேர்ந்து இருப்பதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

