சண்டிகர்: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை தமது அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். இதையடுத்து விஜய் சிங்லா அம்மாநில காவல்துறையால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகின்றன.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததால்தான் ஆம் ஆத்மியால் வெற்றிபெற முடிந்தது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
தமது துறை சார்ந்த ஒப்பந்தப் புள்ளிகள் கோருவது, கொள்முதல் ஆகியவை தொடர்பில் அவர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் அவர் தவறை ஒப்புக்கொண்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சியில் ஒரு ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளைக்கூட அனுமதிக்க இயலாது என அவர் கூறினார்.
"ஆம் ஆத்மி அரசு ஊழலை பொறுத்துக்கொள்ளாது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015ஆம் ஆண்டு தனது உணவு, வழங்கல் துறை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தார்.
"அதே வழியை நானும் பின்பற்றுகிறேன். பஞ்சாப் மாநிலத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறேன்," என்று முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார்.
இந்த ஊழலை முதல்வர்தான் முதலில் கண்டுபிடித்ததாகவும் அதன் பிறகே காவல்துறை வழக்குப்பதிவு செய்தது என்றும் தெரியவந்துள்ளது.

