புதுடெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் கணினி அமைப்பை இணைய ஊடுருவல்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால் அந்நிறுவனத்தின் விமானச் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
எனினும் ஊடுருவல்காரர்களின் முயற்சியை அந்நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு முறியடித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கணினி அமைப்பை சீர்குலைக்கும் முயற்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த இணைய வழி ஊடுருவலால் நேற்று காலை அந்நிறுவனத்தின் விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டது. நேற்று காலை விமானங்கள் தாமதமானதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இணைய ஊடுருவல்காரர்கள் 'ரேன்சம்வேர்' என்ற முறையைப் பின்பற்றி இந்த ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டதும் தெரியவந்தது.
'ரேன்சம்வேர்' தாக்குதல் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் செயலியை தாக்கி கணினி அமைப்பை முடக்குவதாகவும் இதனால் நிறுவன ஊழியர்களால் எந்தத் தகவலையும் பார்க்கவோ, கையாளவோ இயலாது. இதனால் கணினி சார்ந்த எந்தப் பணியும் நடைபெறாது.
எனவே மீண்டும் தகவல்களைக் கையாள வேண்டும் எனில் தொழில்நுட்ப ரீதியில் இணைய ஊடுருவல்காரர்களை முறியடிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கேட்கும் தொகையைத் தர வேண்டியிருக்கும்.
இத்தகைய சூழலைத்தான் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்று எதிர்கொண்டது. எனினும் இணைய ஊடுருவல்காரர்களின் இந்த முயற்சியை தங்களது தகவல் தொழில்நுட்பப் பிரிவு முறியடித்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்த பிரச்சினை காரணமாக ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் நேற்று காலை புறப்படுவதில் சிறிதளவு தாமதம் ஏற்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.