அமராவதி: ஆந்திராவில் அமைச்சர், எம்எல்ஏவின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கொனசீமா மாவட்டத்தில் வன்முறை நீடிப்பதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் உள்ள கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பிஆர் அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என்று மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என சில தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, கொனசீமா பரிரக்ஷனா சமிதி, கொனசீமா சாதனா சமிதி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது மாநில அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது போராட்டக்காரர்கள் அங்கு கூடியிருந்த காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவலர்கள் பலர் காயமடைந்தனர். வன்முறை வெடித்ததை அடுத்து காவல்துறையினரும் களமிறங்கினர். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த முற்பட்டபோது, அமலாபுரம் பகுதியில் உள்ள அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் விஸ்வார்ப், எம்எல்ஏ சதீஷ் ஆகியோரின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. காவல்துறை வாகனம் ஒன்றும், கல்வி நிறுவனத்தின் பேருந்து ஒன்றும் கொளுத்தப்பட்டன.
இதனால், அப்பகுதியே போர்க்களம்போல் காணப்பட்டது.
இதையடுத்து, வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கூடுதல் காவலர்கள் சுற்றுக்காவல், கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறைச் சம்பவத்தின்போது இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்து இருப்பதாக ஆந்திர உள்துறை அமைச்சர் தனேதி வனிதா தெரிவித்தார்.
மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டுவதை நினைத்து பெருமைகொள்ளாமல், ஒருதரப்பினர் பொதுமக்களைத் தூண்டிவிடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியவர்களுக்கு மத்தியில் சமூக விரோதிகள் சிலர் ஊடுருவியதாகவும் அவர்கள்தான் வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

