அமராவதி: ஆந்திராவைச் சேர்ந்த 18 வயதான சுர்லா வினோத் (படம்) தூரிகை இன்றி தனது நாக்கைக் கொண்டு அழகான ஓவியங்களை வரைந்து வியப்பூட்டுகிறார்.
சிறு வயது முதல் ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சுர்லா வினோத், பள்ளி நாள்களில் நிறைய பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
வீட்டிலும் பள்ளியிலும் அவர் வசித்துவந்த ஊராரும் தொடர்ந்த ஊக்கப்படுத்தி வந்த நிலையில், ஒருநாள் சமூக ஊடகத்தில் ஒருவர் தூரிகையைப் பயன்படுத்தாமல் நாக்கால் ஓவியம் தீட்டுவதைப் பார்த்துள்ளார் சுர்லா வினோத். இதையடுத்து, தாமும் இதுபோல் சாதிக்க வேண்டும் எனும் முடிவெடுத்த அவர், அன்று முதல் இந்த வியத்தகு ஓவியம் தீட்டும் முறையைப் பின்பற்றி வருகிறார்.
பாராட்டுகளும் விருதுகளும் தேடி வரும் நிலையில், இவர் ஓவியம் தீட்டும் காணொளிகளுக்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

