2024 தேர்தல்: பலவீனமான தொகுதிகள் அடையாளம்; அமைச்சர்களுக்குப் பொறுப்பு
புதுடெல்லி: இந்தியாவில் பல மாநிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக மிகவும் பலவீனமாக இருக்கிறது என்பதை அந்தக் கட்சி அடையாளம் கண்டு இருக்கிறது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் நடக்க இருப்பதையொட்டி அந்தத் தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த பாஜக வியூகம் வகுத்து இருக்கிறது.
பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள் ஆகியோர் புதன்கிழமை புதுடெல்லியில் கட்சி மத்திய அலுவலகத்தில் கூடினர்.
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக பலவீனமான தொகுதிகளில் கைக்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் உத்திகள் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் விவாதித்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
மொத்தம் 144 தொகுதிகளில் வார்டு நிலையிலான நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக ஊடகங்கள் கூறின.
அந்தத் தொகுதிகளில் கடந்த எட்டு ஆண்டுகால சாதனைகள் மக்களுக்கு எடுத்து விளக்கப்படும். கட்சியின் சித்தாந்தத்தை மக்கள் தெரிந்துகொள்ள தோதாக பல நடவடிக்கைகளும் இடம்பெறும்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர்வதில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் என்று அந்தத் தலைவர் குறிப்பிட்டார்.
அடையாளம் காணப்பட்டு இருக்கும் 144 தொகுதிகளில் 70 விழுக்காட்டு தொகுதிகள் சிறுபான்மையினர் வசம் உள்ளன. அல்லது தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் அதிகமாக உள்ள தொகுதிகள் ஆகும்.
அந்த 144 தொகுதிகளில் பாஜக மத்திய அமைச்சர்கள் அனைவரும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அடுத்த இரண்டாண்டுகளில் தொகுதி வாக்காளர்களைக் கவர்வதற்கு பெரிய அளவில் முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அநேகமாக இந்த நடவடிக்கைகளை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் பாஜக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த தேர்தலில் அந்த 144 தொகுதிகளில் குறைந்தபட்சம் பாதி தொகுதிகளை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று கட்சி இலக்கு நிர்ணயித்து இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.