ஸ்ரீநகர்: ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் (படம்) ஏழு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் லடாக் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது.
பயங்கரவாத ஊடுருவல்கள், தாக்குதல்களைச் சமாளிக்க ஏதுவாக லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் பல்வேறு முகாம்களை அமைத்துள்ளது. அங்கு ஏராளமான வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 26 வீரர்கள் அடங்கிய ராணுவ வாகனம் ஒன்று, லடாக் பகுதியின் பர்தாபூர் முகாமில் இருந்து ஹனீப் என்ற இடத்தில் உள்ள துணை முகாமுக்குச் சென்றது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையில் இருந்து விலகிச் சென்று அருகே உள்ள ஷயோக் ஆற்றில் கவிழ்ந்தது. வாகனம் செங்குத்தாக விழுந்ததால் உருக்குலைந்து போனதாகவும் உயிரிழந்த வீரர்களைத் தவிர மற்ற 19 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 பேருக்கும் அருகிலுள்ள பர்தாபூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அவர்கள் உயர் சிகிச்சைக்காக விமானம் மூலம் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
ஏழு ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

