மோடி: ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுகிறோம்
அகமதாபாத்: முப்பது மில்லியனுக் கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நிரந்தர வீடுகளும் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் மக்கள் வெட்கித் தலைக்குனியும்படி மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
"தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டிற்கு சேவை செய்து எட்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. பல ஆண்டுகளாக, நாங்கள் ஏழைகளுக்கான சேவைக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.
"அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை' என்ற மந்திரத்தை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளோம்," என்று பிரதமர் மோடி கூறினார்.
அரசின் திட்டங்கள் நூறு விழுக்காடு குடிமக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான பிரச்சாரத்தை மத்திய அரசு நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு குடிமகனுக்கும் வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டால், பாகுபாடு முடிவுக்கு வரும் என்றும் ஊழலுக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் மாற்றப்பட்டது என்றும் இலவச எரிவாயு உருளைகளை ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்.
"தொற்றுநோய் தொடங்கியபோது, ஏழைகள் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கினர். நாட்டு மக்களுக்காக உணவு தானியக் கடைகளைத் திறந்தோம். இலவச தடுப்பூசிகளை வழங்கினோம்," என்றார் பிரதமர் மோடி.

