கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர், பட்டுவம் பகுதியைச் சேர்ந்தவர் அனீஷ்குமார். 1980 மே 25ஆம் தேதி பிறந்தவர். இவர் மணம் புரிந்த அஜிதா என்பவர் 1987ஆம் ஆண்டு அதே மே 25ஆம் தேதி பிறந்தவர். இந்த ஒற்றுமையில் அவர்கள் அடைந்த இன்பம் அத்துடன் நின்றுவிடவில்லை.
2012ஆம் ஆண்டு அனீஷ்குமாருக்கும் அஜிதாவுக்கும் மகள் பிறந்தது.
என்ன ஆச்சரியம், அந்தக் குழந்தை பிறந்த தேதியும் மே 25. இது மட்டுமா? ஏழாண்டுகளுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு மகன் பிறந்ததும் மே 25ஆம் தேதி தான்.
இதன் பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் வியப்பின் எல்லைக்கே சென்றது. கடந்த ஈராண்டுகளாக மே 25ஆம் தேதி இந்தக் குடும்பத்தில் உள்ள நால்வரும் பிறந்த நாள் கொண்டாடி வருவதை அறிந்து பட்டுவம் பகுதிக்காரர்கள் வியக்கிறார்கள்.
மே 25 அதிசயம் குறித்து விளக்கிய அனீஷ் குமார், "இது எதேச்சையாக நடந்தது. இதற்காக நாங்கள் எந்தத் திட்டமிடலும் செய்யவில்லை. மகள் ஆரத்யாவுக்கு மே 23 என மருத்துவர் நாள் குறித்துக் கொடுத்திருந்தாலும் மே 25ல்தான் பிறந்தார்," என்றார்.

