புதுடெல்லி: விமானப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் 'சிமுலேட்டர்' இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாற்றைக் கண்டறிந்து சரிசெய்யாமல் விமானிகளுக்கு அதில் பயிற்சி அளித்தமைக்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 90 விமானிகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கோளாறு உள்ள இயந்திரத்தைப் பயன்படுத்தி அந்த விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 விமானிகளும் 'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களை இயக்கி வந்தனர். எனவே, அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்கள் இரண்டு முறை விபத்துக்குள்ளானதால் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த விமானங்களை இயக்க பல்வேறு நாடுகள் தடை விதித்தன. பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டதை அடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அவற்றை இயக்கத் தொடங்கியது.
இந்நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது விமானிகளுக்கு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி பயிற்சி அளிக்கின்றனவா என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வும் சோதனையும் மேற்கொண்டது.
அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் சிமுலேட்டர் இயந்திரத்தில் கோளாறு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சரியான பயிற்சி இன்றி விமானிகளைத் தொடர்ந்து விமானங்கள் இயக்க அனுமதிப்பது பயணிகளின் பாதுகாப்புக்கு உகந்த செயல் அல்ல எனக் கருதுவதாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 90 விமானிகளுக்கும் தடை விதித்துள்ளது.

