திருவனந்தபுரம்: பொருளியல் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் விமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து இலங்கை விமானங்கள் பலவும் கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வந்து எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருந்து இயக்கப்படும் அனைத்துலக விமானங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் சில வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் விமான நிறுவனங்களுக்குப் பெரும் லாபம் கிடைப்பதால், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஆகிய நகரங்களுக்கான விமானங்கள், இலங்கையில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து, அங்கு எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன.
மேலும், விமானப் பணியாளர்களை நேர அடிப்படையில் மாற்றும் மையமாகவும் திருவனந்தபுரம் விமான நிலையம் பயன்படுத்தப்படுகிறது. வான்வழியாகக் கணக்கிடும்போது, சென்னையைவிட திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே இருப்பதால், இலங்கை விமானங்கள் அங்கு சென்று எரிபொருள் நிரப்புவது வசதியாக உள்ளது.
இதற்கிடையே, இந்திய விமான நிறுவனங்கள் இதுகுறித்து கூறுகையில், இந்திய விமானங்களுக்கு வழங்கப்படும் அதே விலையில்தான் இலங்கை விமானங்களுக்கும் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தன.
மேலும், இலங்கை விமானங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளால் நல்ல வருவாய் கிடைப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

