ஸ்ரீநகர்: எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தனது போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக வெளியான தகவல் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்திய எல்லைக்கு மிக அருகாமையில் சீன ராணுவத்தின் 25 போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாகவே இந்திய, சீன எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அவ்வப்போது ஊடுருவுவதும் இந்திய ராணுவம் அத்தகைய ஊடுருவல் முயற்சிகளை தடுத்து நிறுத்தி, பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
லடாக் பகுதியில் சீனா புதிய உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அண்மையில் இந்தியாவுக்கு வருகை புரிந்தபோது அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்திருந்தார். இது இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக் அருகே சீனாவின் ஹோடன் விமானத் தளம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்கெனவே மிக் 21 ரக போர் விமானங்களை நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் அதே தளத்தில் 25 அதிநவீன ஜெ-11, ஜெ-20 ரக போர் விமானங்களை சீனா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய ராணுவம், பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக, சுகோய், மிக், மிரேஜ் ரக போர் விமானங்களை எல்லையருகே தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கண்காணிப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்தி உள்ளது.

