ராஞ்சி: நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்த அவதூறான கருத்துகளைக் கண்டித்து உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அப்போது வன்முறை வெடித்ததை அடுத்து காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆர்ப்பாட்டக்காரர்களில் இருவர் பலியாகினர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த செய்தித்தொடர்பாளர்கள் இருவர் மீதும் பாஜக கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களில் ஒருவரான நூபுர் சர்மா மீது டெல்லி, மும்பை காவல்துறை வழக்குப்பதிவும் செய்துள்ளது.
இந்நிலையில் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் வெள்ளிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சாலைகளில் திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் மீது உடைந்த புட்டிகளும் கற்களும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.
இதையடுத்து ராஞ்சி நகரில் இணையத் தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பெரும்பாலான பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்ததாகவும் சில இடங்களில் மட்டும் காவல்துறையினர் மீது சிலர் கல்வீசி தாக்க முற்பட்டதாகவும் உத்தரப் பிரதேச அரசின் மூத்த செயலாளர் அவினாஷ் அவாஸ்தி தெரிவித்தார்.
ஆறு மாவட்டங்களில் இதுவரை 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் மேற்குவங்க மாநிலம், கோல்கத்தாவுக்கு கிழக்கே உள்ள பல மாவட்டங்களில் வார இறுதி நாள்களில் இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதுடன், ஒரு காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

