புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த அதிபருக்கான தேர்தலில் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கவிருக்கிறது.
ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி வருங்காலத்தில் கொண்டுவரும் முக்கிய மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்தொருமித்த வேட்பாளரைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்பில் அது தனது தோழமைக் கட்சிகளுடன் பேச்சு நடத்திவருகிறது.
இவ்வேளையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பொது வேட்பாளரைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளன. ஆனால் பொதுவேட்பாளரை முடிவுசெய்வதில் இழுபறி நீடிக்கிறது.
தேசியவாதக் காங்கிரஸ் தலைவரான சரத் பவார் அனைத்துக் கட்சிகளுடனும் நல்ல அணுகுமுறையைக் கொண்டிருப்பதால் அவரைக் களமிறக்கினால்தான் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டிச் செயல்பட முடியும் என்று காங்கிரஸின் சோனியா காந்தி கருதுகிறார்.
இடதுசாரி, சிவசேனா போன்றவையும் சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகள், இதர தேசிய கட்சிகளைச் சேர்ந்த 22 தலைவர்களுக்கு அதிபர் தேர்தல் தொடர்பாகப் புதுடெல்லியில் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று புதுடெல்லியில் அவர் திரு சரத்பவாரைச் சந்தித்துப் பேசினார். அமலாக்கத் துறை விசாரணையை ராகுல் காந்தி எதிர்நோக்கும் சிரமமான காலகட்டத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத்பவாருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மம்தா பானர்ஜி, சந்திர சேகர ராவ், நவீன் பட்நாயக் போன்ற தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 81 வயதாகும் சரத் பவார் பொது வேட்பாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருதப்படுகிறது.

