திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை தாம் பலமுறை நேரில் சந்தித்துப் பேசியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்புகள் தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தேவைப்படும்போது அவற்றை வெளியிடத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார் ஸ்வப்னா சுரேஷ்.
மேலும், முதல்வரின் நண்பர் தம்மை சந்தித்துப் பேசியதாகவும் தம்மை தங்கக் கடத்தல் வழக்கில் இருந்து விடுவித்து, வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் ஸ்வப்னா அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"நான் யார் என்பதே தமக்குத் தெரியாது என்று கேரள முதல்வர் கூறுகிறார். நான் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் பலமுறை சந்தித்து உள்ளேன். அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசியுள்ளேன்.
"தேவைப்படும் போது இதை ஆதாரத்துடன் தெரிவிப்பேன். கேரள முதல்வரை சந்தித்தது உண்மை," என்று ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.
முதல்வரின் குடும்பத்தாருக்கும் தங்கக் கடத்தலில் தொடர்புள்ளதாக இவர் கூறியது கேரள அரசியல் களத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பினராயி விஜயன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாநிலம் தழுவிய அளவில் அவை போராட்டங்கள் நடத்துகின்றன.
காங்கிரஸ், பாஜக முஸ்லிம் லீக் உள்பட கட்சியினர் சாலை மறியல் உட்பட பல போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், கேரள முதல்வர் செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படுகிறது.
அண்மையில் பினராயி விஜயன் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். விமானம் தரையிறங்கியதும் அதில் பயணம் செய்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த மஜீத், நவீன்குமார் ஆகிய இருவரும் திடீரென எழுந்து பினராய் விஜயனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும், முதல்வருக்கு அருகே செல்ல முயன்றபோது, அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜன் அவர்களை கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து விமானத்துக்குள் முதல்வரைக் கொல்ல முயற்சி நடந்ததாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேரளாவில் பரவலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மேலும், கோழிக்கோடு அருகே உள்ள பேராம்பிரா என்ற இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது மர்மக் கும்பல் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தனம் திட்டா, ஆலப்புழா உள்பட பல பகுதிகளில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களும் சூறையாடப்பட்டன.
இதற்கிடையே, விமானத்தில் வைத்து காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, அக்கட்சி யினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் காங்கிரஸ் கருப்புதினப் போராட்டத்தில் ஈடுபட்டது.
சில இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் கேரளாவில் பதற்ற மான சூழ்நிலை நிலவி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே ஆங்காங்கே மோதல்

