புதுடெல்லி: அதிபர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினாலும், எதிர்க்கட்சிகள் இடையே இதுதொடர்பாக மறைமுக மோதலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் விதமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.
அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் விதமாக அந்தக் கூட்டத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்தார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகள் அடங்கிய அணியை உருவாக்குவதே தமது நோக்கம் என மம்தா கூறி வருகிறார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சித் தலைமையும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு பக்கம் முதல்வர் சந்திரசேகர ராவும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு முதல்வர் மம்தா பானர்ஜி சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் இதில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே மறுத்து விட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.
இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு அடுத்தபடியாக இந்தக் கூட்டத்தை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் புறக்கணித்துள்ளது. ஒருபோதும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட இயலாது என முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சித் தலைமை விரும்புகிறது.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தியை முன்னிறுத்த எதிர்க்கட்சிகளில் சில ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி கைகூடவில்லை என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.
இதற்கிடையே பாஜக சார்பில் களமிறக்கப்பட உள்ள அதிபர் வேட்பாளர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கசியவில்லை. வேட்பாளர் யார் என்பதை அக்கட்சித் தலைமை முன்பே தீர்மானித்துவிட்ட போதிலும், எதிர்க்கட்சிகளின் அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

